சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்துள்ளது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, அரசு மருத்துவர்கள் தங்குவதற்காக சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தனியார் ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில் பணியில் ஈடுபட, சுகாதாரத்துறை சார்பில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் (கடந்த 2021 ஆகஸ்ட் மாதம்) சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வரும் வெற்றிசெல்வன்(35), மோகன்ராஜ் (28) ஆகிய இருவரும் தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர்.
இவர்கள் கொரோனா வார்டில் பணியாற்றி வந்ததால் தி.நகரில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது அதே மருத்துவமனையில் பணியாற்றிய இரு பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கி வந்தனர்.
விடுதியில் தங்கி இருந்த போது மருத்துவர் (கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர்) வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதேபோல் மற்றொரு மருத்துவரான மோகன்ராஜ் இன்னொரு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக இரு பெண் மருத்துவர்களும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த விசாகா கமிட்டி இந்த புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியது.
புகார் கொடுத்த 2 பெண் மருத்துவர்களிடமும், குற்றச்சாட்டுக்குள்ளான அரசு மருத்துவர்களான வெற்றிச் செல்வன், மோகன் ராஜ் ஆகியோரிடமும் விசாகா கமிட்டியில் இருப்பவர்கள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர்.
இதன்பிறகு விசாரணை அறிக்கை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
விசாரணையில் பாலியல் பலாத்காரம் நடந்தது உண்மை என தெரியவந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன், அப்போதைய தி.நகர் காவல்துறை துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார்.
இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறைக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
தேனாம்பேட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு அரசு மருத்துவர் வெற்றிசெல்வன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும், மருத்துவர் மோகன்ராஜ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்த தேனாம்பேட்டை மகளிர் போலீசார் இரு மருத்துவர்களையும் கைது சிறையில் அடைத்தனர்.
இரு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 26 வயது பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், மருத்துவர் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.