ரூ.12 கோடி லஞ்சம் – சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு
சென்னையில் சிடிஎஸ் நிறுவன கட்டிட திட்ட அனுமதிக்காக 12 கோடி ரூபாய் சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் செயல்பட்டு வரும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்டின் மிகப்பெரிய அலுவலகங்கள் இந்தியாவின் சென்னை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
1994-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து பார்ச்சுன் இதழின் உலகின் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த 2011ஆம் ஆண்டு இணைந்தது. அதுமட்டுமின்றி, இந்நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தையான நாஷ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதால் அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் சென்னை, மகாராஷ்டிராவின் புனே ஆகிய நகரங்களில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கட்டடங்களை கட்டுவதற்கு தேவையான கட்டட வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்புதல்களை மாநில அரசிடமிருந்து பெறுவதற்கு மொத்தமாக 26 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் அந்நிறுவனத்தின் தரப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் விசாரணை செய்ததில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காக்னிசன்ட் நிறுவன கட்டுமான பணி மேற்கொண்டதற்கு இந்திய மதிப்பில் 178 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சி.பி.ஐ இடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். லஞ்சம் பெற்றுக் கொண்டு காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுஷன் நிறுவனத்தை சோழிங்கநல்லூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்குவதற்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், பெயர் குறிப்பிடாத சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்,(சி டி எஸ் )காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீ மணிகண்டன், முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஸ்ரீதர் திருவேங்கடம், காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம், எல் அண்ட் டி முன்னாள் கட்டுமான பிரிவு தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தொழில் பிரிவு தலைவர் கண்ணன் , முன்னாள் செயல் துணைத் தலைவர், தற்போதைய மூத்த செயல் துணைத் தலைவருமான சதீஷ், தற்போதைய கட்டுமான பிரிவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ஆகிய 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில், 2011 முதல் 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. விதிப்படி சிடிஎஸ் நிறுவன அடுக்குமாடி அலுவலகம் கட்டுவதற்கு முன்பாக திட்ட அனுமதி பெற வேண்டும். சி.டி.எஸ். நிறுவனம் லார்சன் அண்ட் டியூப்ரோ என்ற கட்டுமான நிறுவனம் மூலம் கட்டுமான வேலைகளை செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில் சி.டி.எஸ் நிறுவனம் கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்காக 2013 ஆம் ஆண்டு சி.எம்.டி.ஏ. அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தது.
ஆனால் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அப்போதைய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் திட்ட அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகிகள் நந்தகுமார் மற்றும் நாகசுப்பிரமணியன் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலகட்டத்தில் சிடிஎஸ் நிறுவன அலுவலகத்தை கட்டுவதற்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கேட்பதாக சிடிஎஸ் இந்திய நிர்வாகிகள் அமெரிக்காவில் உள்ள சிடிஎஸ் நிறுவன தலைவருக்கு இமெயில் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக லார்சன் அண்ட் டியூப்ரோ கட்டுமான நிறுவனம் மற்றும் சி டி எஸ் நிறுவன நிர்வாகிகள் அமெரிக்காவில் உள்ள சிடிஎஸ் நிறுவனத் தலைவர் ஆகியோரிடம் இமெயில் மூலமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அந்த அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள சிடிஎஸ் நிறுவன தலைவர் கார்டோன் காப்ரூன் லஞ்சம் வழங்குமாறு தெரிவித்ததாகவும், ஆனால் அதை கட்டுமான நிறுவனம் கொடுக்க சொல்லியுள்ள ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது.
லார்சன் அண்ட் டியூப்ரோ கட்டுமான நிறுவனம் லஞ்சமாக கொடுக்கும் பணத்தை சிடிஎஸ் நிறுவனம் போலி ஆவணங்கள் மற்றும் ரசீது தயாரித்து “கட்டுமான மேம்பாடு” என்ற பெயரில் 12 கோடி ரூபாய் பணத்தை பொய்யாக கணக்கு காட்டி சிடிஎஸ் நிறுவனத்தின் இந்திய வங்கியில் செலுத்தியது தெரியவந்தது.
மேலும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனமும் 12 கோடி ரூபாய்க்கு லஞ்சம் வழங்கியதை கணக்கு காட்டாமல் இருக்க கட்டுமான பொருட்கள் வாங்கிய விவகாரத்தில், அதன் நிறுவனங்களுக்கு செலவிட்டதாக பொய்யான கணக்கையும் போலி ஆவணங்களையும் தயாரித்ததும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க சிடிஎஸ் நிறுவனம் வரவு செலவு குறித்து ஆடிட் செய்யும்பொழுது தமிழகத்தில் சிடிஎஸ் அலுவலகம் கட்டுவதற்கு லஞ்சம் கொடுத்து கட்டப்பட்டதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் மற்றும் அமெரிக்க நீதித்துறை கட்டுப்பாட்டில் சிடிஎஸ் நிறுவனம் செயல்படுவதால் விதிகளை மீறி செயல்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு 178 கோடி ரூபாய் அளவில் அபராதங்களை சிடிஎஸ் நிறுவனத்திற்கு விதித்தது குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சிஎம்டிஏ அதிகாரிகள் யார் யாரெல்லாம் சிடிஎஸ் கட்டுமான நிறுவனத்திற்கு திட்ட அனுமதி வழங்குவது தொடர்பாக லஞ்சம் பெற்றார்கள் என்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்காக அப்போதைய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் காலம் தாழ்த்தி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால், அப்போது அமைச்சராக இருந்த வைத்தியலிங்கமும் லஞ்சம் பெற்றுள்ளாரா என்பது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட, தொடர்புடைய சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் காக்னீசன் டெக்னாலஜி சொலுஷன் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகியோருக்கு சமன் அனுப்பி விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.