செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகே 16.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.2 கோடி மதிப்பீட்டில் காலநிலைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்திமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் காலநிலைப் பூங்காவை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து முடிச்சூர் வெளிவட்ட சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, காலநிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் பல்வேறு செடிகள் செயற்கை காடுகள், மழைநீர் தேக்கம், குளம் சிறுவர் பூங்கா போன்றவற்றுடன் அமைக்கப்படும் இந்த பூங்காவை இன்னும் ஒரு மாதத்திற்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்துவைப்பார் என்று தெரிவித்தார். மேலும் அன்றைய தினமே முடிச்சூரில் அனைத்து வசதிகளுடன் 150 பேருந்துகள் நிறுத்த கூடிய ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதல்வர் துவக்கி வைப்பார் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுகாதாரம், குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகப்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பது குறித்து கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருவதோடு, அதற்காக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் விளக்கம் அளித்தார். மேலும் நவம்பர் மாத இறுதிக்குள் மலிவு விலை உணவகம் மக்கள் பயண்பாட்டிற்கு வரும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.