சென்னை பெரம்பூரில் வடமாநில இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். முன்னதாக அவர் ரயில் நிலையம் சென்றிருந்தபோது, அந்த நபர் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. பையை தொலைத்த விரக்தியில் அவர், ரயில் நிலையம் வந்து சென்றவர்களிடம் இதுகுறித்து விசாரித்து வந்துள்ளார். ஆனால் அவர் பேசிய பாஷை புரியாததால், யாரும் அவரை பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
அத்துடன் அந்த நபர் விரக்தியில் மது அருந்திவிட்டு வருவோர், செல்வோரிடம் வழிமறித்து பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று பிற்பகலில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த அவர் மீது தண்ணீர் லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த வடமாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது பெயர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், தெரிந்தவர்கள் நண்பர்கள் யாரையாவது தேடி வந்தாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் எந்த உடமைகளும் இல்லாதபடியால் அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.