பிரபல நடிகை ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன், ரஜினி கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றிக்கு இசையமைப்பாளர் அனிருத்தின் இசையும் முக்கிய காரணம். எனவே ரஜினி, நெல்சன், அனிருத் கூட்டணியில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்திருந்த மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா ஆகியோர் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக சமீப காலமாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த மிர்னா மேனன் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கோயம்புத்தூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பை 20 நாட்களுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.