அமீர்கான் பட நடிகை சுஹாசினி பட்னாகர் காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலகினர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் தங்கல் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் சுஹாசினி பட்னாகர் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றார். தங்கல் படத்தில் இவர் பபிதா குமாரி போகத் என்ற கதாபாத்திரத்தில் அமீர்கானின் மகளாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல விளம்பரங்களிலும் நடித்த சுஹாசினி பட்னாகர் தனது கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்தார். இந்நிலையில் சுஹாசினி பட்னாகருக்கு சில தினங்களுக்கு முன்பாக காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது இவர் மேற்கொண்ட சிகிச்சையினால் இதற்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஹாசினி பட்னாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 19 வயதுடைய இவர் உயிரிழந்த சம்பவம் திரை உலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சுஹாசினி பட்னாகரின் மறைவிற்கு தங்கல் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளது.