நடிகர் அஜித், கரூர் கூட்ட நெரிசல் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கரூரில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பரப்புரை நடத்தப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு விஜயை பலரும் விமர்சித்து வந்தனர். அதே சமயம் விஜய்க்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இது தவிர விஜய் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியதோடு அவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகர் அஜித், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில் அஜித்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அஜித், “கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒரு தனிநபர் மட்டும் பொறுப்பாக முடியாது. எல்லோரும் அதற்குப் பொறுப்பு தான். ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்டக்கூடிய சமுதாயமாக நாம் மாறிவிட்டோம். இது நிச்சயம் முடிவுக்கு வரவேண்டும்.
இதனால் ஒட்டுமொத்த சினிமாவும் மோசமாக சித்தரிக்கப்படுகிறது. அதை நாங்கள் விரும்பவில்லை. ரசிகர்களின் அன்பை தான் விரும்புகிறோம். ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். விஜய்க்கு ஆதரவான அஜித்தின் இந்த கருத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


