அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படமும் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒத்திவைக்கப்படும் என தகவல் கசிந்துள்ளது. ஏனென்றால் அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. எனவே விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 இல் ரிலீஸான பிறகு ஏப்ரல் 14ஆம் தேதி ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் அந்த சமயத்தில் குட் பேட் அக்லி திரைக்கு வந்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் விடாமுயற்சி படத்திற்காக போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போய்விடும். இதன் காரணமாக நெட்பிளிக்ஸ், குட் பேட் அக்லி படக்குழுவிடம் அப்படத்தை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.