நயன்தாரா – கவின் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர், ராக்காயி, மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக் என தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘கிஸ்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது ‘மாஸ்க்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாராவும், கவினும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஷ்ணு எடாவன் இயக்குகிறார். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (அக்டோபர் 8) மாலை 5.04 மணி அளவில் புதிய அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு ‘ஹாய்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.