இயக்குனர் மாரி செல்வராஜின் படங்களை மிஸ் செய்து விட்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் ‘பரதா’ எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் இவர் ஏற்கனவே தமிழில் கொடி, சைரன், டிராகன் ஆகிய படங்களில் நடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது 2025 தீபாவளிக்கு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜின் படங்கள் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். மீண்டும் மாரி என்னை ‘மாமன்னன்’ படத்தில் நடிக்க அணுகினார். அதையும் நான் மிஸ் செய்து விட்டேன். ஆனால் எனக்கு ‘பைசன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மாரியின் ஸ்டைல் மிகவும் வித்தியாசமானது. பைசன் படத்திற்கு முன்பாக நான் எந்த பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் உள்ளூர் மக்களுடன் பேசி பழகி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். இது மிகவும் ஸ்பெஷலானது. இதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.