அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக ‘விடுதலை பாகம் 2’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்தது சிம்புவின் 49ஆவது படமான ‘அரசன்’ படத்தை இயக்க உள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் ப்ரோமோவுடன் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதேசமயம் இந்த படமானது ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸாக உருவாகிறது என்றும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 24) தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்த வார இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது நடிகர் விஜய் சேதுபதி ‘அரசன்’ படத்தில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த நிலையில், விஜய் சேதுபதியின் ரோல் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. மாஸ்டர், விக்ரம், ஜவான் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். எனவே அரசன் படத்திலும் அவர் வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும்? என ரசிகர்கள் இப்பொழுதே கற்பனை செய்யத் தொடங்கி விட்டார்கள்.


