தமிழ் சினிமாவில் அர்ஜுன் தாஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அதை தொடர்ந்து லோகேஷின் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் தொடர்ந்து ஹீரோவாக புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பாம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது இதுவரை முரட்டுத்தனமான வில்லனாக பார்த்த அர்ஜுன் தாஸை, ‘பாம்’ படத்தில் அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் பார்க்க முடிந்தது. இது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இது தவிர அர்ஜுன் தாஸ் They Call Him OG என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மேலும் ‘ஒன்ஸ் மோர்’ என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் அர்ஜுன் தாஸ். இந்நிலையில் இவர், லோகேஷ் கனகராஜ் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “தற்போதைக்கு நெகட்டிவ் ரோல்களை தேர்வு செய்யவில்லை. மேலும் அது வேண்டும், இது வேண்டும் என்று நான் சிந்திக்கவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிப்பதற்கு அழைத்தால் உடனே சென்று விடுவேன். அவர் எனக்கு கதை கூட சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் எனக்கான அடையாளத்தை தந்தவர் அவர்தான்.
அவர் சொல்லும் கேரக்டரில் நான் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன். ஹீரோவோ, வில்லனோ எதுவாக இருந்தாலும் இயக்குனர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பேன். இயக்குனர்களின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன். நம்மை உயரத்தில் வைக்க நினைக்கும் கூட்டத்தில் இயக்குனர்கள் தான் முக்கியமானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -


