தனுஷ் நடித்துள்ள ராயன் படத்தின் திரைவிமர்சனம்
திரை பிரபலங்களுக்கு 50வது, 100வது படங்கள் என்பது மிகவும் ஸ்பெஷல். எவ்வளவுதான் அந்த படங்கள் ஸ்பெஷலாக இருந்தாலும் அது வெற்றி படமாக அமைந்தால் மட்டுமே ரசிகர்களும் அந்த படத்தைக் கொண்டாடுவார்கள். இல்லையென்றால் எளிதில் மறந்து விடுவார்கள். எனவே ஒவ்வொரு ஹீரோக்களும் தனது 25, 50, 100வது படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்வார்கள். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கு அவருடைய 50ஆவது திரைப்படமான மங்காத்தா திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை தந்தது. அதேபோல் விஜய் சேதுபதிக்கு அவரது 50வது திரைப்படமான மகாராஜா, ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தனுஷ் தானே இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளதா? என்பதை பார்க்கலாம்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் தனுஷின் தம்பிகளாக சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளனர். தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். தனுஷின் தாய், தந்தை இருவரும் தங்கை, தம்பிகளை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு வெளியூர் செல்கின்றனர். இரண்டு நாட்களைக் கடந்தும் இருவரும் வீடு திரும்பாத காரணத்தால் நடிகர் தனுஷ், ஊர் பூசாரியிடம் சென்று உதவி கேட்கிறார். ஆனால் பூசாரி தனுஷின் தங்கையை விற்க முயல, தனுஷ் பூசாரியிடம் சண்டை போட்டு ஒரு கட்டத்தில் கையில் அரிவாளை எடுத்து பூசாரியை வெட்டி விடுகிறார். எனவே இந்த ஊரில் இருந்தால் பாதுகாப்பு இல்லை என தனுஷ் தனது தம்பி தங்கையுடன் வேறொரு ஊருக்கு சென்று செல்வராகவனிடம் உதவி கேட்கிறார். அங்கு வேலை செய்து தம்பி தங்கைகளை கவனித்து வருகிறார் தனுஷ். நான்கு பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சந்தீப் கிஷனால் குடும்பத்தில் பிரச்சனை ஒன்று எழுகிறது. தாதா கும்பல் சந்தீப் கிஷனை கொல்ல முயல்கிறது. இதனால் பகை ஏற்பட்டு ஒரு பழிவாங்கும் கதையாக ராயன் படம் நகர்கிறது.
ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி துஷாரா விஜயனின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படுகிறது. சந்தீப் கிஷனின் கதாபாத்திரம் தனுசுக்கு நிகரான கதாபாத்திரமாக அமைந்துள்ளது. எஸ் ஜே சூர்யா படத்தில் அடாவடியான வில்லனாக இல்லாமல் ஸ்மார்ட்டான வில்லனாக நடித்திருக்கிறார். தனுஷ் – எஸ் ஜே சூர்யாவிற்கு இடையேயான மோதல் எந்தவித சலிப்பையும் ஏற்படுத்தாமல் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி எஸ் ஜே சூர்யா, முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தூள் கிளப்புகிறார். மேலும் படமானது ஓவராக நாடகத்தனமாகவோ உணர்வுபூர்வமானதாகவோ இல்லாமல் அமைந்திருக்கிறது. படத்தின் முதல் பாதி ஸ்லோவாக சென்றாலும் இரண்டாம் பாதி சுவாரசியமாக நகர்கிறது. அதிலும் இன்டர்வெல் பிளாக் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது. ஏ ஆர் ரகுமானின் பிஜிஎம் படத்திற்கு முதுகெலும்பாக திகழ்கிறது.
வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். மேலும் தேவையற்ற காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆதலால் தனுஷின் 50வது படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்பாதையில் நகர்கிறது.