நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தை அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷண், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை அடுத்து, தெலுங்கில் சேகர் கம்முலா, இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் திரைப்படங்களில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி, ‘தனுஷ் நடிப்பில், இளையராஜா வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது தன் கனவு. கடந்த 3 தலைமுறைகளாக இசை அமைத்து வரும் இசையமைப்பாளர் அவர். இளையராஜாவின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு தனுஷ் தான் பொருத்தமானவராக இருப்பார்’ என்று சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.
இந்நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா’வைத் தயாரிக்கும் கன்கெட் மீடியா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது. 2025-ம் ஆண்டு படம் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.