‘டியூட்’ படம் குறித்து இயக்குனர் கீர்த்திஸ்வரன் பேட்டி கொடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க மமிதா பைஜு கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்து இருந்தார். கலகலப்பான காதல் கலந்த பொழுதுபோக்கு படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று கிட்டத்தட்ட ரூ.83 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த படம் கலாச்சார சீர்கேடை ஏற்படுத்துவதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இளைஞர்களை கவர்ந்த இந்த படம் இனிவரும் நாட்களிலும் வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் வெளியான பின்னர் இப்படத்தின் இயக்குனர் கீர்த்திஸ்வரன் பேட்டி கொடுத்துள்ளார். அவர் அந்த பேட்டியில், “நான் கணித்த விஷயங்களும் நடந்து இருக்கிறது. எதிர்பாராத விஷயங்களும் நடந்து இருக்கிறது. அதாவது படம் ரிலீஸ் ஆன பின்னர் படம் பற்றிய நிறைய நல்ல விவாதங்கள் இருக்கும் என்று நினைத்தேன். அதேசமயம் படத்தின் பல அம்சங்களை பற்றி மக்கள் பேசுவார்கள் என்றும் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்றும் கணித்தேன்.
ஏனென்றால் இந்த படம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. தயாரிப்பாளர்களும் படம் மிகப்பெரிய எண்ணிக்கையில் வசூல் செய்கிறது என்று கூறியுள்ளனர். அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் எதிர்பாராத விஷயம் என்னவென்றால், சில காட்சிகளுக்கு பார்வையாளர்களின் வரவேற்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.


