தங்கலான் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ள பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
காதல், காமெடி, கமர்ஷியல் என வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் அழைத்துச் சென்ற பெருமை ஒரு சிலரை மட்டுமே சாரும். அதில் முக்கியமான நபர் பா.ரஞ்சித். அடித்தட்டு மக்களின் மனதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டியவர் பா. ரஞ்சித். அட்டக்கத்தி படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகினார். முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகில் முத்திரை பதித்தார். தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வடசென்னை வாழ்வை ரசிகர்களுக்கு காட்டினார்.
அடுத்தடுத்து ரஜினியை வைத்து காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதைத் தொடர்ந்து பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கினார். இவர் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாதம் வௌியாகும் என தெரிவிக்கப்பட்டது. இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இவரது தயாரிப்பில் அண்மையில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தங்கலான் பிறகு தான் இயக்க உள்ள அடுத்தபடத்தின் ஆரம்ப கட்ட பணிகளை இயக்குநர் பா.ரஞ்சித் தொடங்கி இருக்கிறார். இத்திரைப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாகவும், பான் இந்தியா படமாக வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.