நடிகர் தனுஷ், நடிப்பது மட்டுமில்லாமல் பாடல் பாடுவது, படம் தயாரிப்பது, படம் இயக்குவது போன்ற பன்முகத் திறமைகளை உடையவர். அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்த தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். கடந்த 2017 ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் கூட்டணியில் வெளியான ப. பாண்டி திரைப்படத்தையும் தனுஷ் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனுஷ் இயக்கியுள்ள D50 படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ராயன் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், இப்படத்தை
2024 ஏப்ரல் மாதத்தில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
மேலும் தனுஷ் இதைத் தொடர்ந்து மூன்றாவதாக புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தனுஷின் அக்கா மகன் வருண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன்பாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜிவி பிரகாஷ் பேசி இருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்திலும், விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா சுரேந்திரன் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் தனுஷின் ஐம்பதாவது படத்திலும் அனிகா சுரேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.