நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த திரையரங்கையை அதிர வைத்தார். அதன் பின்னர் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு, பாபி தியோல், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. மேலும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் சூர்யாவிடம், கங்குவா படத்தில் கார்த்தி ஸ்பெஷல் ரோலில் நடித்திருப்பதாக கேள்விப்பட்டோம். உங்கள் இருவரின் கூட்டணி எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சூர்யா, “ஏன் சர்ப்ரைஸை கெடுக்க வேண்டும். பார்ப்போம், அது கார்த்தியா அல்லது வேறு நடிகரா என்று” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகர் கார்த்தி கங்குவா திரைப்படத்தின் கிளைமாக்ஸ்- இல் வில்லனாக வருவார் என்றும் அந்த காட்சிதான் இரண்டாம் பாகத்திற்கான லீடு என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது. மேலும் ட்ரைலரிலும் முகம் மறைக்கப்பட்ட உருவம் ஒன்று காட்டப்பட்டது. எனவே அது கார்த்தி தான் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.