நடிகர் ரஜினி ஓய்விற்கு பின் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான வேட்டையன் திரைப்படம் தற்போது மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்ட காரணத்தால் அறுவை சிகிச்சையின் மூலம் அந்த வீக்கம் அகற்றப்பட்டு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவரின் பரிந்துரையின்படி சில நாட்கள் வீட்டில் இருந்தே ஓய்வெடுத்தார் ரஜினி. அதன் பின்னர் உடல்நலம் தேறிய ரஜினி இன்று (அக்டோபர் 25) ஈவிபி, ஆதித்யா ராம் ஸ்டுடியோஸில் நடைபெறும் கூலி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகவும் இன்று முதல் அவரது போர்ஷன்களில் நடிக்க இருப்பதாகவும்
புதிய தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.