கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் 11,500 திரைகளில் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் 3D டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “சாதாரணமாக ஒரு படம் எடுப்பதை கல்யாணம் நடத்துவது போல் தினம் ஒரு பிரச்சனை இருக்கும். ஆனால் இந்த படத்தை ஒரு பிறந்தநாள் பார்ட்டி போல் சுலபமாக எடுத்துக் கொடுத்துவிட்டார் சிறுத்தை சிவா. எந்த தொழில்நுட்ப கலைஞர்களிடம் இருந்தும் எதற்காகவும் எனக்கு அழைப்பு வராது. என்ன நடக்கிறது என்பதை சிவா சொல்வார். ஒரு தயாரிப்பாளராக குறைவான டென்ஷனுடன் இருந்தது கங்குவா படத்தில் தான். சூர்யா தன்னுடைய மூன்று ஆண்டுகளை கங்குவா படத்திற்காக செலவிட்டடுள்ளார். அதற்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. காட்டில் யானை பலத்துடன் இருக்கும்,அதே யானை கோவிலில் இருக்கும் அதே காட்டு யானை தான் அதே பலம் தான் ஆனால் அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வோம், தொட்டு பார்ப்போம் அதனால் யானை பலம் போய்விட்டது என்று அர்த்தம் இல்லை. அந்த காட்டு யானையின் பலத்தை 14 ஆம் தேதி பார்ப்போம். கடந்த சில ஆண்டுகளில் பான் இந்தியா ஹிட் படம் இல்லாமல் உள்ளது. ஏன் விழாக்காலங்களில் தீபாவளி சமயத்தில் இந்தப்படத்தை வெளியிடவில்லை என்று கேட்டார்கள் அப்போது இவ்வளவு பெரிய வரவேற்பு இருந்திருக்காது. இந்தியா முழுவதும் 10,500 முதல் 11,500 திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது” என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி பேசியபோது, “கங்குவா திரைப்படம் எந்த ஒரு லைட்டும் இல்லாமல், பகல் முழுவதும் இயற்கை வெளிச்சத்தைக் கொண்டு மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம். சின்ன ஒளி பிரதிபலிப்பு கூட இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்படவில்லை” என்றார்.
இயக்குனர் சிறுத்தை சிவா பேசியபோது, “இந்த திரைப்படம் உருவாக காரணமே ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் மீது வைத்த நம்பிக்கை தான். இந்த கங்குவா படத்தின் கதையை எழுதும் போது இது பெரிய அளவில் போகிறது என்று தெரிந்த பொழுது என்னால் இது முடியுமா என்று கேள்வி வந்தது, அப்போது எழுதும்போது நான் மட்டும் இருக்கிறேன் படம் எடுக்கும் நமது குழு நம்முடன் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. என்னை சுற்றி உன்னால் முடியும் நீ செய்து விடுவாய் என்று சொல்லும் நபர்களாக இருந்தார்கள். எங்கள் அண்ணனுக்கு ஒரு நல்ல படத்தை கொடுங்கள் என்று ரசிகர்கள் எங்கு சென்றாலும் சொல்லி கொண்டு இருந்தார்கள். நிச்சயம் இந்த படம் சிறப்பாக அமையும். அந்த மனிதனின் உழைப்பு மிகப் பெரியது. உங்கள் அன்புக்கு 100% தகுதியான ஒரு மனிதன். காலை 4 மணிக்கு எழுந்திருப்பார், 6 மணி முதல் நடக்கும் படப்பிடிப்பில் ஒரு காட்சி கூட வேண்டுமா என்று கேள்வி கேட்கவில்லை. ஒரு பெரிய டீம் நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்று உண்மையான உழைப்போடு கொண்டு வந்தார்கள். அனைத்து டெக்னீஷியன்களும் என்னுடைய படம் என்று சொல்லாமல், எங்கள் படம் என்று சொன்னார்கள்” என்று தெரிவித்தார்.
நடிகர் சூர்யா பேசியபோது, “நான் வாரணம் ஆயிரம் படம் பண்ணியபோது கமல்ஹாசனிடம் படத்தை காட்டினேன், அந்த நேரத்தில் தசாவதாரம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்..தசாவதாரத்தில் 10 வேடங்களையும் என்னிடம் போட்டு காட்டினார். அவருக்கு நான் வெற்றியை பற்றியோ, ஜெயிப்பது பற்றியோ சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை, அவர் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் சூர்யா. அவர் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருந்தது. காங்குவா போன்ற ஒரு அனுபவம் இன்று எடுக்காமல் என்று எடுப்போம் என்று தான் இந்த படத்திற்குள் இறங்கினோம். ஊர் கூட்டி தேரை இழுப்பது போல் நிறைய தயாரிப்பாளர்களை இணைத்து இந்த படத்தை நகர்த்தினார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நானும் தயாரிப்பாளர் தான் ஆனால் என்னால் இதை செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை என்றார். எல்லோரும் நம் நல்லாருக்க வேண்டும், அவரவர் குடும்பத்தை வளர்க்கணும் என்று யோசிப்பார்கள், ஆனால் ரசிகர்களாகிய நீங்களும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் மட்டுமே நான் எப்போதும் நல்லாருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றார். கணவன் மனைவி இருவரும் திருமணம் செய்து கொண்டால் கட்டாயம் வாழ வேண்டும் என்று இல்லை. கணவன் மனைவியால் சந்தோஷபட வேண்டும்,மனைவி கணவனால் சந்தோஷ படவேண்டும். அது போலதான் இந்த படத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் முயற்சியை பார்த்து சந்தோசமடைந்தோம், மரியாதைக்குரியவர்களாக ஆகினோம். எல்லா இயக்குனரும், எல்லா திரைத்துறையும் கங்குவா திரைப்படத்தை பார்த்து வாயை பிளக்க போகிறார்கள் என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். படத்தில் முந்தி ஓடி ஜெயிப்பது போல் தேவி ஶ்ரீ பிரசாத் செய்துள்ளார். இந்த உலகத்தை பார்த்ததில்லை, தொட்டத்தில்லை, உணர்ந்ததில்லை அதை மறைந்த கலை இயக்குனர் மிலன் தான் உயிரோட்டமாக கொண்டு சேர்த்தார். இது 700 வருட பழமையான கதைக் களம் கொண்ட படம் இது. 4 முதல் 5 தீவுகளில் நடக்கும் படம் ஃபேண்டஸி, வரலாறு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். வெளியிலும் ஒரு போரை கங்குவா சந்திக்க வேண்டும் அதே போல் அவனுக்குள்ளும் ஒரு போர் இருக்கும்.இந்த படம் மன்னிப்பு பற்றி மிக உயர்வாக பேசும். வாக்கு ஒரு சொல் என்பதை உயர்வாக பேசும் எந்த படத்திலும் இல்லாதது போல் உள்ளது. ஒருவர் உண்மையாக உழைத்தாலே மிகப்பெரிய வெற்றி இருக்கும் ஆனால் 3000 பேர் உண்மையாக உழைத்து உள்ளார்கள்.நவம்பர் 14 ஆம் தேதி சந்திப்போம் இரட்டை தீபாவளியாக இருக்க போகிறது” என நடிகர் சூர்யா தெரிவித்தார்.