காந்தாரா சாப்டர் 1 படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும், நடிப்பிலும் ‘காந்தாரா’ திரைப்படம் வெளியானது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தொழில்நுட்ப காரணங்களால் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று அதிக வசூலை வாரிக் குவித்தது. இதைத்தொடர்ந்து ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் ப்ரீக்குவலை, காந்தாரா சாப்டர் 1 என்ற தலைப்பில் எடுத்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதோடு, வசூலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்படம் வெளியான 6வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.33 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது எனவும் உலக அளவில் 6 நாட்களில் ரூ.427.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே பலரும் எதிர்பார்ப்பதை போல் இப்படம் இனிவரும் நாட்களில் ரூ.1000 கோடியை கடந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
ரிஷப் ஷெட்டி ஏற்கனவே காந்தாரா படத்தின் அடுத்த பாகங்களை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறி இருந்தார். தற்போது காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கும் நிலையில், இதன் அடுத்தடுத்த பாகங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.