காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர் தான் கவியரசு கண்ணதாசன். அவர் வாழ்ந்த காலத்தில் காவியங்கள் இல்லாமல் கதைகள் இருக்கும். ஆனால் கண்ணதாசனின் பாடல்கள் இல்லாமல் எந்த கதையுமே இருக்காது. இவர் ரசிகர்கள் மனதில் தன் பாடல் வரிகளில் மட்டும் அல்லாமல் ரசிகர்களின் உணர்வுகளோடு கலந்தவர். அந்த அளவிற்கு இவருடைய பாடல்கள் மெல்லிசையாய் கலந்த மறக்க முடியாத காவியங்களாக காதுகளில் தேனாய் வடிந்தன. இதன் காரணமாகவே பாதரசன், கலைத்தாயின் இளைய மகன், உலகம் போற்றும் கவிஞர் என்று பல பெயர்களால் கொண்டாடப்படுகிறார். இத்தகைய பெருமையையுடைய கவியரசு கண்ணதாசன் அவர்களை பற்றி பேச இந்த ஒரு கட்டுரை போதாது என்றாலும் சில வரிகள் அவரைப் பற்றி பேசி அவரை எண்ணிப் பார்ப்போம்.1981 ஜூன் 24இல் சாட்டப்ப செட்டியார் – விசாலாட்சி ஆகிய தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்தான் கண்ணதாசன். கலையில் ஆர்வம் கொண்ட கண்ணதாசன் நூல்கள், கவிதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள்,பழ மொழிகள் என பல எண்ணற்ற அற்புத படைப்புகளை படைத்துள்ளார். அதே சமயம் திரைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பும் அளப்பரியது. அதன்படி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதி உள்ளார். அதிலும் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். காலம் செல்ல செல்ல அவரது சிந்தனைகள் வளர்ந்து கொண்டே தான் சென்றதே தவிர எந்த விதத்திலும் குறையவில்லை. அதிலும் குறிப்பாக கண்ணதாசனும் எம்.எஸ்.வியும் இணைந்தாலே திரைத்துறையில் அபூர்வம் தான் நடக்கும். இதற்கிடையில் இவர் ஆன்மீகத்திலும் அரசியலிலும் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல் திருமகள், திரை ஒலி, தென்றல், முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் இறக்கும் சமயத்தில் தமிழக அரசின் கவிஞராக இருந்தார். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி வனவாசம் என்ற தலைப்பில் சுயசரிதைகளை எழுதி இருக்கிறார். மேலும் தேசிய விருது, சாகித்ய அகாடமி விருது போன்ற விருதுகள் இவரால் பெருமை அடைந்தன.
இவ்வாறு கவிச்சக்கரவர்த்தியாய் திரை உலகை கட்டி ஆண்ட கவியரசு கண்ணதாசன், மறைந்தாலும் கோடி மக்களின் நெஞ்சங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் கவியரசு கண்ணதாசனின் 97வது பிறந்த நாளான இன்று (ஜூன் 24) அவரின் நினைவுகளை எண்ணி பெருமை கொள்வோம்.