சூரி நடிப்பில் நேற்று (மே 31) வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போடும் திரைப்படம் தான் கருடன். இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இயக்குனர் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கருடன் படத்திற்கு பிறகு பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
லெஜெண்ட் சரவணன், ஆரம்பத்தில் தனது தொழில் ரீதியான விளம்பர தொடர்களில் நடித்ததன் மூலம் திரையில் தோன்றினார். பின்னர் இவர் 2022-ல் வெளியான லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து லெஜெண்ட் சரவணன் தன்னுடைய புதிய படத்திற்காக தனது லுக்கை மாற்றி படத்திற்காக மிக தீவிரமாக தயாராகி வருகிறார். அந்த வகையில் துரை செந்தில்குமார், லெஜெண்ட் சரவணன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் 7ஆம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.