த்ரிஷ்யம் மூன்றாம் பாகத்தை நடிகர் மோகன்லால் உறுதி செய்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்த நிலையில் இதில் மோகன்லாலுடன் இணைந்து நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன்படி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் ரூ. 75 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதே சமயம் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 திரைப்படம் கடந்த 2021 இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களின் இமாலய வெற்றிக்கு பிறகு த்ரிஷ்யம் 3 திரைப்படம் எப்போது உருவாகும்? என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் த்ரிஷ்யம் 3 படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய மோகன்லால், த்ரிஷ்யம் 3 படத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது என்றும் இந்த படம் பான் இந்திய அளவில் உருவாக இருக்கிறது என்றும் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.