தமிழ் சினிமாவில் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஜேஷ். அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றார். அந்த வகையில் கிட்டதட்ட 45 வருடங்களுக்கும் மேலாக தமிழில் மட்டுமே 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார். மேலும் சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் தான் இவர் கடந்த மே 29ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். இவருடைய உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ராமநாதபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ராஜேஷின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (மே 31) நடிகர் ரஜினி ராமநாதபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பொது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” ராஜேஷுக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. அவர் நிறைய படிப்பார். நிறைய கற்றுக் கொள்வார். அரசியல், ஆன்மீகம், விஞ்ஞானம் என அனைத்தும் அவருக்கு தெரியும். மற்றவர்களுக்கும் அது தெரிய வேண்டுமென பாடுபடுவார். நல்ல மனிதர். அவருடைய இழப்பு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -