நடிகர் ரஜினிகாந்த், சசிகலாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டிஜே ஞானவேல் இயக்க படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படத்தில் நடிக்க உள்ளார். ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.
இந்நிலையில் ரஜினி சசிகலாவை சந்தித்துள்ளார். அதாவது சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இந்த புதிய வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில் ரஜினியால் கிரகப்பிரவேச நிகழ்ச்சியின் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் நேற்று (பிப்ரவரி 24) சசிகலாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள், ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி எழுப்ப அரசியல் பேச விரும்பவில்லை என பதில் அளித்துள்ளார் ரஜினிகாந்த்.