Homeசெய்திகள்சினிமாநடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச தயார்... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச தயார்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

-

- Advertisement -

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், 8 வாரங்களுக்கு பிறகே ஓ.டி.டியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி அறிக்கை வெளியிட்டது. இதற்கு உடனடியாக நடிகர் சங்கம் கண்டனத்தை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி, ஏற்கனவே தாங்கள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் உறுதியாக உள்ளதாகவும், இது தொடர்பாக செயற்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டதாகவும், இதை நிறைவேற்றுவதில் தீர்க்கமாக உள்ளதாகவும் கூறினார். தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்துவதும், நிறுத்துவதும் நடிகர்களின் கையில் தான் உள்ளதாக கூறிய தேனாண்டாள் முரளி, தாங்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க சொல்லவில்லை என்றும், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மற்ற சினிமா துறையில் உள்ளது போன்று வியாபாரத்தில் ஷேரிங் முறைக்கு மாற வேண்டும் எனதான் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

சினிமா துறையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் தான் நஷ்டத்தை சந்திப்பதாக கூறிய அவர்,தீர்மானத்தில் தாங்கள் தெரிவித்த தேதிக்கு முன் நடிகர் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டினால் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறும் என்று தெரிவித்தார். நடிகர் சங்கத்திடம் ஏற்கனவே தனுஷ் மீதான புகாரை தெரியப்படுத்தி உள்ளதாக கூறிய தேனாண்டாள் முரளி, தேவைப்படும் பட்சத்தில் எழுத்துப்பூர்வமான புகார் மனுவை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார்.

நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

5 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு எடுத்து விட்டதாகவும், அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தேனாண்டாள் முரளி விளக்கம் அளித்தார். மேலும் விஷால் மீது தவறான நிர்வாகம் நடத்தியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்கு தயாராக உள்ளதாகவும் தேனாண்டாள் முரளி கூறினார்.

 

 

 

 

MUST READ