சப்தம் படத்தின் திரை விமர்சனம்.
தமிழ் சினிமாவில் ஈரம், குற்றம் 23, ஆறாத சினம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் அறிவழகன். இவரது இயக்கத்திலும் ஆதியின் நடிப்பிலும் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சப்தம். இந்த படம் இன்று (பிப்ரவரி 28) மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அருண் பத்மநாபன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் தொடக்கத்தில் மூணாறில் உள்ள மெடிக்கல் காலேஜில் மூன்று மாணவர்கள் சடலமாக கண்டெடுக்கப்படுகிறார்கள். எனவே இவர்களது மரணம் கொலையா? தற்கொலையா? என்பதைப் பற்றி கண்டறிவது தொடர்பாக கதை நகர்கிறது. இந்த படத்தில் நடிகர் ஆதி ஆவிகளுடன் பேசுபவராக (paranormal investigator) நடித்திருக்கிறார். அதன்படி இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பதை கண்டறிகிறார். அதேசமயம் இந்த மூன்று கொலைகளை பற்றி போலீஸ் விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் ஆதிக்கு லட்சுமிமேனன் மீது சந்தேகம் எழுகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
சப்தம் படத்தின் முதல் பாதி மெதுவாக தொடங்கி முதல் பாதையில் இறுதியில் வேகம் எடுக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் முழுவதுமே பரபரப்பாக திரில்லிங்காக செல்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது இயக்குனர் அறிவழகன் ஆவிகளைப் பற்றி, பிளாக் மேஜிக் பற்றி மிகவும் ஆராய்ச்சி செய்து இருக்கிறார் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் நுணுக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்றுள்ளார். காட்சிக்கு காட்சி நம்ப முடியாத விஷயங்களை கூட நம்ப வைத்துள்ளார் அறிவழகன். அதாவது இயக்குனர் அறிவழகன் இந்த படத்தை அறிவியல் கதையாகவும் கொண்டு செல்லாமல் பேய் கதையாகவும் கொண்டு செல்லாமல் சூடோ சயின்ஸ் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார். அதேசமயம் நடிகர் ஆதி வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். எந்த ஒரு இடத்திலும் தனது முக பாவணையை மாற்றி விடாமல் அப்படியே பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டராக மிரட்டி இருக்கிறார். அடுத்தது லட்சுமி மேனன் மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் லைலா, சிம்ரன், ராஜீவ் மேனன் ஆகியோர் தங்களின் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளனர்.
ரெடின் கிங்ஸ்லியின் காமெடிகள் இந்த படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் அவரை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அடுத்தது எம்.எஸ். பாஸ்கர் சிறிய ரோலில் நடித்திருந்தாலும் தனது நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். இவ்வாறு நடிகர், நடிகைகளின் நடிப்பு சப்தம் திரைப்படத்தை எந்தவித சோர்வும் இல்லாமல் நகர்த்தி இருப்பதைப் போல இந்த படத்தின் ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பெரும் பலம் தந்துள்ளது. அருண் பத்மநாபன் ஒவ்வொரு காட்சிகளையும் படம் பிடித்தவிதம் அருமை.
மேலும் இசையமைப்பாளர் தமன் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை திரில்லர் அனுபவத்தை குறைய விடாமல் பயங்கரமான பின்னணி இசையை கொடுத்து அசத்தியிருக்கிறார். மொத்தத்தில் திரைக்கதையின் மூலம் இயக்குனர் எப்படி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறாரோ அதுபோல தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்கு உயிர் தந்துள்ளனர். எனவே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத சப்தம் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.