நடிகர் சிவகுமார், தங்கச் சங்கிலி அணிவித்து இளையராஜாவை வாழ்த்தியுள்ளார்.
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் இவர் பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். இவர் தன்னுடைய இசையால் எப்படி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறாரோ அதேபோல் இவருடைய குரலாலும் பலரையும் வசியப்படுத்திவிடுவார். அந்த அளவிற்கு இவருடைய இசையிலும் குரலிலும் ஏதோ ஒரு மேஜிக் இருக்கும். இந்நிலையில் தான் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலியண்ட் என்ற தலைப்பில் லண்டனுக்கு சென்று தன்னுடைய முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். எனவே இளையராஜாவின் சிம்பொனி இசையை ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் மெய்மறந்து கண்டு களித்தனர். 82 வயதிலும் மகத்தான சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த இளையராஜாவிற்கு திரைப் பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் சிவகுமார் தன்னுடைய மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன், இசைஞானி இளையராஜாவை அவருடைய இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தனர். அப்போது சிவக்குமார், இளையராஜாவிற்கு தங்கச் சங்கிலி அணிவித்து இளையராஜாவை வாழ்த்தினார். சூர்யா மற்றும் பிருந்தா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து இளையராஜாவை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.