நடிகர் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் பொம்மை திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படத்தை ஏஞ்சல் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படம் ஒரு சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது அதன் பின் கடந்த ஆண்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதையானது, ஒரு உயிரற்ற பொம்மையை தன் காதலியாக நேசிக்கும் ஒரு மனநல பிரச்சனையால் அவதிப்படும் ஒருவனின் கதையை பின்னணியாக கொண்டு அமைந்துள்ளது.
இப்படத்தில் எஸ் ஜே சூர்யா பொம்மைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பொம்மை எஸ் ஜே சூர்யா வின் சிறு வயது காதலி நந்தினியை(பிரியா பவானி சங்கர்) நினைவூட்டுகிறது.
அந்த பொம்மையை உயிருள்ள காதலியாக நினைத்து உருகுகிறார்.
அந்த பொம்மையை விற்று விட வேண்டாம் என்று தன் வேலை செய்யும் நிறுவனத்தின் சூப்பர்வைசரிடம் கூறுகிறார். இதற்கிடையில் அவர் தனது ஊருக்கு சென்று திரும்பி வந்து பார்க்கும்போது அந்த பொம்மை விற்பனை செய்யப்பட்டுள்ளதை அறிகிறார்.
அதனால் கோபமடைந்து சூப்பர்வைசரை கொலை செய்கிறார். அதன் பின் தொலைந்த அந்த பொம்மையை தேடி கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அதன் பின் ஒரு வழியாக அந்த பொம்மையை கண்டுபிடித்து விடுகிறார். அதேசமயம் சூப்பர்வைசர் கொலை சம்பந்தமாக போலீஸ் இவரை தேடி வருகிறது. இறுதியில் காதலியாக நினைக்கும் அந்த பொம்மையோடு அவர் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பதே இந்த படத்தின் மீதமுள்ள கதையாகும்.
எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு வழக்கம்போல் சிறப்பாகவே அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வித்தியாசமான நடிப்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை தாங்கி நிற்கிறது. பிரியா பவானி சங்கர், ஒரு உயிரற்ற பொம்மைக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார். இப்படத்தில் சாந்தினி கதாபாத்திரம் தேவை இல்லாமல் இருந்தாலும் அவரும் தனது நடிப்பை குறை இல்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனாலும், ஒரு அழுத்தமான காதல் கதையை கூறும் இந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை சலிப்படைய வைத்திருக்கிறது.
இருந்த போதிலும் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சிறப்பாக அமைந்துள்ளது. படம் முழுக்க லாஜிக்கே இல்லாமல் இருந்தாலும் கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பத்தை தந்துள்ளார் இயக்குனர் ராதா மோகன்.
மொத்தத்தில் விறுவிறுப்பாக ஒரு நல்ல திரைக்கதையுடன் கூடிய சைக்கோ திரில்லர் படமாக வரவேண்டிய ‘பொம்மை’ ஒரு சுமாரான படமாக வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.