நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடக் கூடாது எனவும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தும் பல அரசியல் தலைவர்கள் போர் கொடி காட்டி வருகின்றனர். அதே சமயம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது எனவும் எச்சரித்துள்ளனர். ஆனால் கமல்ஹாசன் நான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கிடையில் கமல்ஹாசனுக்கு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆதரவு குரல் கொடுத்துள்ளார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கமும் கமல்ஹாசனுக்காக ஆதரவு தெரிவித்துள்ளதாக தற்போதைய தகவல்கள் கிடைத்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாய பிம்பத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்க முடியாது. கமல்ஹாசன் பேச்சை குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அரங்கத்தில் புரிந்துகொண்டு தவறான புரிதலை பரப்பி வருகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலும், பதட்டமும் நிலவி வருகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துபவர் நடிகர் கமல்ஹாசன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.