நடிகர் சூர்யா, மம்மூட்டியுடன் கூட்டணி அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அடுத்தது ஆர் ஜே பாலாஜி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படம் நடிகர் சூர்யாவின் 45 வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் சூர்யா, மலையாள இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் தன்னுடைய 47வது திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி பசில் ஜோசப், சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படமானது சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படம் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், தற்காலிகமாக சூர்யா 47 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை மலையாள நடிகர் மம்மூட்டி தயாரிக்க இருக்கிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.