நடிகர் சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து மற்றுமொரு பான் இந்திய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன், விக்ரம் ஆகிய படங்களுக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். அதே சமயம் இவர் பாலிவுட்டில் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. அதாவது நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டு மற்ற மொழி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஆனால் எதுவும் சூர்யாவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்நிலையில் தான் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல பட இயக்குனர் ஒபேலி N கிருஷ்ணா பான் இந்திய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம் சூர்யா.
இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஒபேலி N கிருஷ்ணா, சூர்யா ஆகியோரின் கூட்டணி கடந்த 2006 இல் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி கண்ட நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.