டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்காக கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், மிதுன், கமலேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பொருளாதார கஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு குடும்பம் பல சிக்கல்களைக் கடந்து புது வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் அறிமுக இயக்குனர் அபிஷன், எமோஷனல் கலந்த நகைச்சுவை படமாக கொடுத்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் முதல் வார இறுதியில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது வாரமாக வெற்றி நடைபோடும் இந்த படத்திற்கு கூடுதலாக 85 திரையரங்குகளும், கூடுதல் காட்சிகளும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூலும், ரசிகர்களின் ஆதரவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.