விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் அர்ஜுன் ரெட்டி, குஷி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதேபோல் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பணியாற்றி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவரும் இணைந்து கீத கோவிந்தம், காம் ரேட் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இருவரும் இணைந்து கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அதே சமயம் இருவருமே வெளி இடங்களுக்கு டேட்டிங் சென்று வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட இருவருமே தனித்தனியே தங்களின் காதலை உறுதி செய்திருக்கின்றனர். தற்போது இவர்கள் இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. மேலும் இன்னும் ஆறு மாதத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் விரைவில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.