விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில் விஜய் சேதுபதி ஏஸ், ட்ரெயின் ட்ரெயின் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேசமயம் விண்ட் என்ற வெப் தொடரையும் கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அடுத்ததாக இவர் கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படம் தொடர்பான தகவல்கள் சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படமும் பாண்டிராஜின் மற்ற படங்களைப் போல கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டையில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிகை நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -