கேப்டன், புரட்சி கலைஞர், கருப்பு எம் ஜி ஆர் என்று தமிழ் மக்களால் கொண்டாடப்படுபவர் விஜயகாந்த். நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான இவர், சினிமா, அரசியலைத் தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் இன்று வரையிலும் மீள முடியாத துயரத்தில் தமிழ் மக்கள் இருக்கின்றனர். விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் ரசிகர்களும் தொண்டர்களும் சென்று விஜயகாந்துக்கு தங்களின் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்றும் அஞ்சலி செலுத்துகின்றனர். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடைய விஜயகாந்த் கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் விஜயகாந்தின் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளனர் என்பதை விஜயகாந்தின் ஊர்வலத்தில், திரண்ட மக்கள் வெள்ளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது. அது மட்டும் இல்லாமல் விஜயகாந்த் மறைந்து ஒரு மாத காலம் முடிந்த பின்பும் அவரின் நினைவுகள் எங்கும் பரவி இருக்கின்றன. அதன் அடிப்படையில் ரசிகர்களும் தொண்டர்களும், விஜயகாந்தின் மீது வைத்துள்ள அன்பை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 11 தொண்டர்கள் மாலை அணிந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர். அதேசமயம் கடவுளுக்கு இணையாக போற்றப்படும் கேப்டன் விஜயகாந்தின் புகைப்படத்தை வைத்து காவி உடை அணிந்து, விரதம் இருந்து தர்ம தேவனே போற்றி போற்றி என்ற நாமத்தை உச்சரித்து பாதயாத்திரை செல்ல உள்ளனர். மேலும் சில பேர் சனிக்கிழமை பாதயாத்திரை செல்ல உள்ளனர். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.