- Advertisement -
கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதோடு சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் தாம்தூம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். இத்திரைப்படம் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தமிழில் அடுத்தடுத்து படம் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தமிழில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் தான் சந்திரமுகி இரண்டாம் பாகம். பி.வாசு இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் லாரன்ஸூடன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தார்.
இதனிடையே அவர் அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஹிமாச்சல் மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சினிமாவை தவிர்த்து அவர் அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
https://x.com/i/status/1798993148460556546
இந்நிலையில், டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையம் சென்றிருந்த நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்தார். இது டெல்லியில் போராடிய விவசாயிகளையும், பெண்களையும் இழிவாக பேசியதற்காக என்றும் காவலர் தெரிவித்திருக்கிறார். இதனால், நிலை தடுமாறிப்போன கங்கனாவை மற்ற பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு விமானம் ஏற்றி வைத்தனர். இதைத் தொடர்ந்து பஞ்சாப்பில் தீவிரவாதம் அதிகரித்து விட்டதாகவும் கங்கனா வீடியோ வெளியிட்டிருந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து பெண் காவலர் குல்விந்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவருக்கு பஞ்சாப் மாநில மக்கள் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கின்றனர். பலரும் அவரை பாராட்டி வருகின்றர். அதோடு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் குல்விந்தருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்து இருக்கிறார். மேலும், பிரபல பாடகரும், இசை அமைப்பாளருமான விஷால் தால்தினி குறிப்பிட்ட அந்த பெண் காவலருக்கு பணி வழங்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.