ரவுடி நாகேந்திரன் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 51 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேரை கைது செய்தனா்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சென்னை செம்பியம் காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, அருள், கோபி, குமரன், ஹரிஹரன், திருமலை, திருவேங்கடம், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, அஸ்வத்தமன், நாகேந்திரன் உள்ளிட்ட 28 நபர்களை செம்பியம் காவல்துறையினர் கைது செய்தனர். அதில் திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா எண்கவுன்டர் செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் A 1 குற்றவாளியாகவும், A2 குற்றவாளியாக நாகேந்திரனும் உள்ளனர்.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 28 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர். இந்நிலையில் நாகேந்திரன் மனைவி சிறையில் உள்ள கைதி எவ்வாறு கொலை செய்ய முடியும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளபடி செய்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இல்லாமல்லியின் மகனும் ரவுடியுமான விஜய்தாஸ் என்பவரை நாகேந்திரன் ஆதரவாளர்கள் கொலை செய்தனர். இதற்கு பழி வாங்க காத்திருந்த இல்லாமல்லி உடல் நலக்குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் ரவுடி நாகேந்திரன் தம்பி முருகன்- இல்லாமல்லியின் மற்றொரு மகன் மோகன்தாஸ் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இன்று ரவுடி நாகேந்திரன் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த சோதனையில் 51 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரவுடி நாகேந்திரனின் தம்பிகள் ரமேஷ், முருகன், தம்பிதுரை மற்றும் தமிழழகன் உள்பட ஏழு பேரை கைது செய்தனர்.