கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பதிமடுகு கிராமத்தைச் சோ்ந்த ரூபேஸ் (22 ), ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரும், கிருஷ்ணகிரி, கட்டிகானபள்ளி, பாரதியாா் நகரைச் சோ்ந்த சூசைராஜ் (27), என்பவரும் நண்பா்கள். இவா்கள் இருவரும் ஓா் இருசக்கர வாகனத்தில் தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி நமாஸ் பாறை அருகே சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயங்களுடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.