போலி தங்க கட்டியை விற்று ரூ.13 லட்சம் மோசடி செய்த ஆந்திரா தம்பதிகளை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ருதி 45, மளிகை கடை நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் கடையில் இருந்த ஸ்ருதியிடம் பொருட்களை வாங்க வந்த ஒரு தம்பதி அறிமுகமாகி நன்றாக பேசினர். அப்போது தங்களிடம் ஒரு கிலோ தங்க கட்டியுள்ளது என்றும் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று கூறினர். தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசையில் ஸ்ருதி விசாரித்தார்.

இதையடுத்து தம்பதி தங்களிடமிருந்த தங்க கட்டியை ஸ்ருதியிடம் காட்டினர். அவரை நம்ப வைக்க தங்க கட்டியில் இருந்து, சிறிய துண்டை மட்டும் வெட்டி கொடுப்பதாக தெரிவித்தனர். இதற்கு சம்மதித்த ஸ்ருதி, தம்பதி கொடுத்த சிறிய துண்டை கடைக்கு சென்று பரிசோதனை செய்த போது, தங்கம் என்பது தெரிந்தது.
இதை நம்பி, ஒரு கிலோ தங்க கட்டியை வாங்க முடிவு செய்த ஸ்ருதி, தனது கணவரிடம் தெரிவித்தார். பின், 13 லட்சம் ரூபாயை கொடுத்து ஒரு கிலோ தங்க கட்டியை வாங்கினார். தொடர்ந்து கடையில் விற்க கொண்டு சென்ற போது, தங்கம் இல்லை என்பதும், அது முழுவதும் பித்தளை என்பது தெரிந்தது. தம்பதி போலி தங்க கட்டியை கொடுத்து ஏமாற்றியது தெரிந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் பல்லடத்தில் இருந்து தம்பதி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக இரு தம்பதி ஜோடிகளை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பித்தளையை தங்க கட்டியாக செய்து அதன் மேல் வர்ணம் பூசி விற்று ஏமாற்றியது தெரிந்தது.
இதுதொடர்பாக ஆந்திரா குண்டூரை சேர்ந்த தம்பதிகள் ரவி 41 – துர்கா 35 மற்றும் முனுசாமி 38 – குமாரி 30 ஆகியோரை கைது செய்து ஆறு கிலோவுக்கு தயாராக வைத்திருந்த போலி தங்க கட்டிகலை போலீசார் பறிமுதல் செய்தனர்.