Homeசெய்திகள்க்ரைம்அண்ணா பல்கலை, பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’: பத்திரிகையாளர்களை பதம்பார்க்கும் போலீஸ்..!

அண்ணா பல்கலை, பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’: பத்திரிகையாளர்களை பதம்பார்க்கும் போலீஸ்..!

-

- Advertisement -

அண்ணா பல்கலை, பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’ ஆன சம்பவத்தில், பத்திரிகையாளர்கள் 3 பேரின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் இணையத்தில் கசிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எப்.ஐ.ஆர்., ‘பிளாக்’ செய்யப்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் அருண், பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இது பற்றி, போலீஸ் மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஐகோர்ட் நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர். சுப்ரீம் கோர்ட்டும் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்நிலையில், எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’ ஆன சம்பவத்தில் பல்வேறு நபர்களிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், 3 பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ”விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வழக்குகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சட்டவிதிகள் இருந்தபோதும் இது எப்படி வெளியானது என்பது குறித்து காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக்குழு. பத்திரிகையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக, இந்த அழைப்பாணையை பத்திரிகையாளர்களின் செல்போன்களுக்கு ‘வாட்ஸ்ஆப்’ மூலம் காவல்துறை அனுப்பி வருகிறது. இருந்தபோதும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதியும், சட்டத்தை மதித்தும் பத்திரிகையாளர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர்.

அவ்வாறு விசாரணைக்குச் செல்லும் பத்திரிகையாளர்களை சிறப்பு புலனாய்வுக் குழு மணிக்கணக்கில் காக்க வைப்பதாகவும், குற்றவாளிகளைப்போல் நடத்துவதாகவும், தேவையற்ற மற்றும் விசாரணைக்கு சற்றும் பொருந்தாத கேள்விகளை கேட்பதாகவும் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கும் மேலாக, விசாரணைக்குச் சென்ற சில பத்திரிகையாளர்களின் செல்போன் மற்றும் சில மின்னணுக் கருவிகளை சிறப்பு புலனாய்வுக் குழு பறிமுதல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வது, அவர்களின் சுதந்திரமான செயல்பாடுகளை முடக்குவதுடன், அவர்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது.பணியின் நிமித்தமாக இத்தனை ஆண்டுகளாக அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் தொடர்புகளை, ஒட்டுமொத்தமாக முடக்கும் நடவடிக்கையாகும். காவல்துறை இத்தகைய நடவடிக்கை அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும்.

ஆகவே, சட்டத்தை மதித்து விசாரணைக்கு ஒத்துழைக்கும் பத்திரிகையாளர்களை துன்புறுத்துவது மற்றும் அச்சுறுத்துவதை காவல்துறை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பத்திரிகையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் இதரக் கருவிகளை உடனே திரும்ப வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

MUST READ