போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் மர்ம மரணம்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் ரஞ்சித் குமார் (27). இவர் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மறைமலைநகர் பகுதியில் கொரியர் டெலிவரி செய்த போது காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே பள்ளி மாணவியும், ரஞ்சித் குமாரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி ரஞ்சித் குமாரை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சித் குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் சிறை நிர்வாகத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரஞ்சித் குமாரை அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து ரஞ்சித் குமாரின் உறவினர்கள் தரப்பில் கூறுகையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறையில் உள்ள ரஞ்சித் குமாரை பார்த்து விட்டு வருவதாகவும், போகும் போதெல்லாம் தன்னை சிறையில் உள்ள காவலர்கள் கடுமையாக தாக்குவதாக கூறி உள்ளார்.
இது குறித்து ரஞ்சித் குமாரின் அக்கா பாரதி காவலர்களிடம் கேட்டதாகவும், அதனால் மீண்டும் மீண்டும் காவலர்கள் ரஞ்சித் குமாரை அடித்து துன்புறுத்தியதாக கூறுகின்றனர்.
மேலும், நேற்று சிறைக்கு சென்று பார்த்த போது ரஞ்சித் குமாரின் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியதற்கு சிறை காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகவும், ரஞ்சித்குமாரை சிறைக் காவலர்கள் தான் அடித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.