மதுபோதையில் தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் (20) என்பவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் மதுரவாயிலைச் சேர்ந்த நிதிஷ் (16) என்ற ஐடிஐ மாணவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால் பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று இரவு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல் கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

இதில் கிருபாகரனின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வளசரவாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிருபாகரன் மற்றும் நிதிஷ் ஆகிய இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விபரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில் தாக்குதல் நடத்தியது பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் உள்ளிட்ட 5 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைத்தி வருகின்றனர்.