ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது
ஆரணியில் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கட்டிங் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கல்லால் தாக்கி கொலை செய்த குடிமகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (49) இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் சுரேஷ், ஜெய் என்ற 2 மகனும் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர். மேலும் பிரகாஷ் துணி இஸ்திரி செய்யும் தொழில் செய்து வருவதாகவும் வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆரணி மையப்பகுதி காந்தி ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் குடிப்பதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் அதிகளவில் மதுகுடித்துவிட்டு தள்ளாடிய படியே அரசு டாஸ்மாக் கடை அருகில் உள்ள கடை வளாகத்தில் உறங்கிவிட்டதாக தெரிகின்றன.

அப்போது அங்கு வந்த சேத்பட் வட்டம் கனகம்பட்டு கிராமத்தை சேர்ந்த (40) என்பவர் தனது நண்பனான பிரகாஷிடம் கட்டிங் சரக்கு வாங்கி தருமாறு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சரக்கு வாங்கி தர பிரகாஷ் மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த தென்றல் அரசு கல்லால் பிரகாஷை தாக்கியதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் தென்றல் அரசு அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.

இதனையடுத்து காலையில் பஜார் வீதியில் பொதுமக்கள் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் இறந்துள்ளதை பார்த்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்த பிரகாஷின் மகள் பிரியங்கா கொடுத்த புகாரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஆரணி டவுன் எஸ்.ஐ சுந்தரேசன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து, ஆரணி டவுன் வ.ஊ.சி தெரு பகுதியில் பதுங்கி இருந்த குடிமகன் தென்றல் அரசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் ஆரணி வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் வியாபார சங்க தலைவர் எஸ்.டி.செல்வம் தலைமையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி டாஸ்மாக் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரனிடம் டாஸ்மாக் கடை மாற்ற கோரிக்கை மனு அளித்தனர்.
ஏற்கனவே பஜார் வீதியில் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதாகவும் தற்போது கொலை சம்பவம் நடந்தேறி உள்ளதால் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.