திண்டுக்கல் மாநகராட்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குப்பைத் தொட்டிகள் வாங்கியதில் ரூ.17கோடி முறைகேடு. முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
திண்டுக்கல் நகராட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. தற்பொழுது திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. திண்டுக்கல் நகராட்சியின் தலைவராக 2011 ஆம் ஆண்டு முதல் அதிமுகவை சேர்ந்த மருதராஜ் இருந்து வந்தார்.

பின்னர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் மேயராக 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்தார். தமிழகத்தின் 11 ஆவது மாநகராட்சியாக திண்டுக்கல் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சிக்காலமான 2015 முதல் 2018 வரையில் உள்ளாட்சியில் தணிக்கை துறை துணை இயக்குனர் தலைமையில் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டது.
துணை இயக்குனர் தணிக்கையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் 2015-16 முதல் 2018 -19 வரையான வரவு செலவு கணக்கில் மாநகராட்சிக்கான வரி வருவாய், முதலீடு, குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை நிதி, துவக்க கல்வி நிதி ஆகியவற்றிலிருந்து ரூ.17 கோடியே 73 லட்சத்து 16 ஆயிரத்து 820 மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையின்படி, அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர், மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 12 வரை உள்ள சொத்துக்களுக்கு அதன் அசல் சொத்துவரி மதிப்பை விடவும், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் குறைவான சொத்துவரி வசூலித்து ரூ.18 லட்சத்து 272 முறைகேடு செய்துள்ளனர்.
அதேபோல், சென்னையைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான சுசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு 137 குப்பைத்தொட்டிகள் ரூ.51 லட்சத்து 71 ஆயிரத்து 750க்கு வாங்கப்பட்டுள்ளது. சந்தைநிலவரப்படி ரூ.19 ஆயிரத்து 834 மதிப்பு கொண்ட ஒரு குப்பைத்தொட்டிக்கு 5 சதவீத வாட் வரியுடன் ரூ.17 ஆயிரத்து 916 கூடுதலாக விலை நிர்ணயம்செய்து ஒரு குப்பைத்தொட்டி ரூ.37 ஆயிரத்து 750 என 137 குப்பைத்தொட்டிகளை ரூ.51 லட்சத்து 71 ஆயிரத்து 750க்கு வாங்கி வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தணிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் மனோகர், முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், பணி ஓய்வு பெற்ற முன்னாள் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் கணேசன், முன்னாள் மாநகராட்சி துணை பொறியாளர் மாரியப்பன், மாநகராட்சி துணை பொறியாளர் சுவாமிநாதன், சுசி இண்டஸ்ட்ரி உரிமையாளர் நடராஜன் என 6 பேர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜ், இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இவை அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயராக மருதராஜ் பதவிக்காலம் முடியும் தருவாயில் இருந்து இந்த ஊழல் நடைபெற்றுள்ளது.
ஜோதிநகர் ஜாத்திரை…பெற்றோர் கண்டித்தால் கல்லுாரி மாணவி தற்கொலை