துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், பயணிகள் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்த, ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கப்பசையை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.
துபாயில் இருந்து ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி சென்றனர். அதன் பின்பு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். எனவே விமான, லோடர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விமானத்திற்குள் பயணிகள் அமரும் இருக்கை ஒன்று வழக்கத்துக்கு மாறாக உயர்ந்து இருந்தது. எனவே அதை சரி செய்ய முயன்றனர். அப்போது இருக்கைக்கு கீழே பிளாஸ்டிக் பவுச் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து லோடர்கள், விமானப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் வந்து பிளாஸ்டிக் பவுச்சை சோதனை இட்டனர்.அதனுள் தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனடியாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் பவுச்சை ஒப்படைத்தனர்.சுங்க அதிகாரிகள், அந்தப் பவுச்சுக்குள் இருந்த 1.6 கிலோ தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 78.2 லட்சம்.
இந்நிலையில் சுங்க அதிகாரிகள் இதுபற்றி வழக்கு பதிவு செய்து, துபாயில் இருந்து கடத்தி வந்த தங்க பசையை, விமானத்திற்குள் மறைத்து வைத்துவிட்டு, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர். விமானத்திற்கு உள்ள சி சி டிவி கேமரா, விமானநிலைய நிலைய வருகை பகுதியில் உள்ள, கேமரா காட்சிகள் ஆகியவற்றை தீவிர ஆய்வு செய்து,விசாரணை நடத்துகின்றனர்.