காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கைகால்களைக் கட்டிப்போட்டு, 10 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓரிக்கை தனிகைவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்து, தீபாவின் கைகால்களைக் கட்டிப் போட்டுள்ளனர்.

பின்னர் வீட்டின் பீரோவை உடைத்து, அதில் இருந்த 10,000 ரூபாய் பணத்தையும், அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சரடு மற்றும் பிற நகைகள் என மொத்தம் 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவிடைமருதூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகை, 2.5 கிலோ வெள்ளி கொள்ளை
