கிருஷ்ணகிரி அருகே காதலித்து திருமணம் செய்த கணவரை கொன்ற சங்கரின் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளரான இவரும், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே உள்ள புழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவரின் மகள் சரண்யா என்பவரும் காதலித்து வந்தனர்.

இதில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜெகனும் சரண்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சரண்யாவின் தந்தை சங்கர் நேற்று கிருஷ்ணகிரி டேம் ரோடு அருகே பட்டப்பகலில், நடுரோட்டில் தனது மருமகனான ஜெகனை வெட்டிக்கொன்றார்.
பின்னர், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணை முடிந்து, சேலம் சிறைச்சாலையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பெயரில் சேலம் சிறைக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் ஷங்கருடன் சேர்ந்து கொலை செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் அவதானபட்டியில் உள்ள சங்கரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
வீட்டில் இருந்த டிவி, மேஜைகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக இருக்கும் நிலையில், போலீசார் சங்கரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.