திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் பல லட்ச ரூபாய் வரி பணம் மோசடி செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை முருகன் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த போது இறந்த காரணத்தினால் வாரிசு அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகராட்சி இளநிலை உதவியாளராக சரவணன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் வீட்டு வரி, குழாய்வரி, பாதாள சாக்கடை வரி, போன்றவற்றிற்கான தொகையை நாள்தோறும் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். பொதுமக்கள் செலுத்துகின்ற பணத்தை வசூல் செய்யும் ஊழியர்கள் சரவணனிடம் அதற்கான கணக்குகளை ஒப்படைப்பது வழக்கம். நாள்தோறும் வசூல் ஆகக்கூடிய பணத்தை உதவி ஆணையர், உதவி கணக்கு அலுவலர், மற்றும் கணக்காளர் ஆகியோரிடம் கணக்கை காட்டி வங்கியில் செலுத்தக்கூடிய செலானில் (CHALLAN) கையொப்பம் பெற்று வங்கியில் சரவணன் செலுத்த வேண்டும்.
ஆனால் நாள் தோறும் வசூலாகும் பணத்தை கணக்குபடி முழுவதுமாக வங்கியில் செலுத்தாமல் சரவணன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. வசூல் பணத்திலிருந்து தனக்குத் தேவையான தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை வங்கியில் செலுத்தி உள்ளார்.
பாலா, அருண் விஜயின் ‘வணங்கான்’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!
வங்கியில் பணம் செலுத்தும் செலானில் (CHALLAN) மூன்று அதிகாரிகளின் கையெழுத்துக்களையும் போலியாக போட்டு தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு மீதி தொகையை கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி பல நாட்களாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மாநகராட்சி வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் இதுபோல் பல லட்ச ரூபாய் மோசடி நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணனிடம் ஆணையர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சரவணனை பணியிட நீக்கம் செய்ய உத்தரவிட்டு சரவணன் பணி காலத்தில் மேலும் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் சரவணன் பணிக்காலம் முழுவதும் ஆய்வு செய்யும்படி உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனருக்கு ஆணையர் ரவிச்சந்திரன் கடிதம் எழுதி உள்ளார்.
இதைத்தொடர்ந்து வரி வசூல் மற்றும் வங்கியில் பணத்தை செலுத்துவதை முறையாக கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தியிடம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.